அரசு பெண் ஊழியர்களுக்கு வேலைநேர சலுகை இன்று முதல் அமல் - Kalvimalar-கல்விமலர்

Latest

Thursday, May 4, 2023

அரசு பெண் ஊழியர்களுக்கு வேலைநேர சலுகை இன்று முதல் அமல்

புதுவை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை பூஜைகள் மேற்கொள்ள வசதியாக மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8.45 மணிமுதல் 10.45 மணிவரை 2 மணிநேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த மாதம் 27-ந்தேதி அறிவித்தார். 


கவர்னரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் சிறப்பு அனுமதி மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால் அரசுப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் இந்த அனுமதியை சுழற்சி முறையில் வழங்கலாம். மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

 இந்த சிறப்பு அனுமதி தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளன. இருந்தபோதிலும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அரசு பெண் ஊழியர்களுக்கான இந்த சிறப்பு அனுமதியானது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

No comments:

Post a Comment